Sunday, February 1, 2009

இரண்டாம் மனசொன்றின் சாட்சி

என்னில்
குறை என்ன கண்டாய்
கோதை மலர்த் தோழி

ஆயிரம்
அம்பு வீசி
என்னில் சினந்ததே
உன் பார்வை

மூன்றாம்
பிறை நிலவு
முகம்
சூரியனாய் சுட்டதே

இறுதியாக
கூரிய உன்
வார்த்தை ஆணிகள்
கழுமரச் சிலுவையில்
என்னை அறைந்துபோனதே

மூர்க்க
யானை ஒன்றினால்
துவசம் செய்யப்பட்ட
ஊரைப்போல
குலைந்துபோய்க் கிடக்கிறேன்
நான்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகளால்
குத்துண்டு குத்துண்டு
பட்ட காயங்களின்
எரிவோடு

சுயநலப் பூதமொன்று
எனக்குள்
அலைந்து திரிவதாய்...
அதன் நான்கு சுவர்களுக்குள்
நான்
அடையுண்டு கிடப்பதாய்...
சீற்ற சிங்கமொன்று
என்னை சீண்டி விடுவதாய்...
சிலவேளை
ஊதாரி போல என்
கோபங்களை நான்
செலவளித்துவிடுவதாய்...
நீ சாட்டிய
குற்றங்களுக்காக
கம்பியேயில்லாத
கூண்டொன்றில்
நிற்கிறேன் நான்

இத்தனையும்
யாரையும் புரிந்துகொள்ளாமல்
என்னை மட்டுமே
தியானித்துக்கொண்டு
நான் இழைத்தவைகளாம்

அன்றொருநாள்
பேசாதே என்றாய்
கவிதை மட்டுமே
பேசத்தெரிந்த உன்
விழிகள்
கத்தி கொண்டு துரத்த

அப்போதே - என் மனசு
குத்திக் கிழிந்த
கந்தலாய்
சாலை ஓரத்தில்
கிடந்தை நீ
பார்க்காமலா போனாய்

நீ
கடந்து போகிறாய்
பூவைப்போல் இருந்த
உன்னை
என் மனசில் இருந்து
பிடுங்கிக்கொண்டு

நீ இல்லாத
வெறுமை ஒரு
மலையின் சுமையாய்
என் தலைமீது கனக்கிறது

இத்தனைக்குப் பிறகும்
உன்னைத்தேடி
வருகிறேன் நான்
உன்னை மீண்டும், என்மீது
நிரவிக்கொள்வதற்காக அல்ல

ஒரு வார்த்தை
சொல்ல வேண்டும்

நன்றி

நீ காட்டிய
அக்கறைக்கும் அன்பிற்கும்

1 comment:

rasha said...

kavithai is super romba adipattu irukkinga. keep it up.