Thursday, September 18, 2008

நீ சொன்ன வார்த்தை.............

நீ சொன்ன வார்த்தை
சூறாவளியை எனக்குள்ளே
சுவீகரித்துப் போயிற்று.

இன்னும் என்ன சொல்ல
நீயே சொல்லிவிட்டாய் - கழகத்திற்கு
காரணம் நான் என்று.

மின்னல்களை
உன்னோடு வைத்துக்கொண்டு
இடியை என்னோடு
தந்துவிட்ட மேகச் சகியே.....
நீ பொழிந்துவிட்டுப்
போன பிறகும்
நானல்லவா கண்ணீர் நதி
வடிக்கிறேன்.

கலைந்து போ
இன்னும் சில தேசங்களை
குளிரவை
இன்னும் சில பாறைகளையும்
குப்புற விழுந்து - ஆறாய்
குமிறி அழ வை......

நினைத்த மாத்திரத்தில்
மறந்திருக்கலாமடி - நீ
இப்போது எப்படி
எடுத்த எடுப்பில்
வெட்டி எறியவா
இத்தனைக்கும் பழகவிட்டாய்
நம் வார்த்தைகளை...

ஊருக்கு பிடிக்கவில்லையா!
நிறுத்திவிடலாம்.
இன்னும் சிலது பிடிக்கவில்லையாம்
செய்துவிட்டு வா.......
உன் புன்னகை பிடிக்கவில்லையாம்
உன் வளர்ச்சி பிடிக்கவில்லையாம்
உன் அழகு பிடிக்கவில்லையாம்
தடுக்க சாத்தியமா???

இன்னும் உனக்கு
புரியவில்லை தானே !!!!!
நீ சிரிக்க யார் மகிழ்கிறார்களோ...
நீ வலிபட யார் அழுகிறார்களோ....
நீ வருகிறபோது மலர்வும்
உன்னை பிரிகிற போது
யார் கண்ணில் நீரும் வருகிறதோ
அவர்களே உன் தோழர்கள் என்று....

சினேகிதி
நீ பிரிவது குறித்த
வருத்தத்திலும்
இந்த உலகையும் உன்னையும்
புரியாது போகிறாய்
என்பதே என் வேதனை

இங்கே கலைந்துவிட்டு
இன்னொரு காட்டில் போய் - இதை
நினைத்து குறுகி அழப் போவதை
நினைத்தே என் வருத்தம்.

தோழி.....
தாங்கும் கைகளை
இங்கே விட்டு விட்டு
எங்கே போகிறாய் விழிசிந்த....

கெஞ்சல்களால் என்னை
தைத்துவிட்டு
எங்கே போகப்போகிறாய்
கொஞ்சல்களுக்கு.......

நான் செய்தது குற்றம் தான்
அரை விழிகளால்
குறையுடல் மேயும் பார்வைகளுக்கிடயில்
அங்கமெங்கும்
ஆசைகளை தொங்கவிட்டு
காத்திருக்கும் விழிவேட்டை நாய்களுக்கிடயில்
என் முழுவிழி கொண்டு
உன் முகம் பார்த்து பேசியது
குற்றம்தான்.

அழகே அன்பாய்
பணமே பாசமாய்
போய்விட்ட பிறகும்
அன்பே அழகாய்
வார்த்தைகளே சீதனமாய்
கொண்டது குற்றம் தான்.

முன்பெல்லாம் கோரிக்கைகளால்
என்னை கொடுமைப்படுத்துவாய்
பொறுத்துக்கொண்டேன்
இப்போது
கட்டுப்பாடுகளால்
கட்டிப்போட்டு விட்டாயே!!

சகியே....
கொடிது கொடிது
தீண்டாமை கொடிது.

கூந்தல் முடி
விரல் நுனி
ஏற்று - கள்ளமில்லாமல்
தொட்ட ஸ்பரிசம் - இப்போது
எப்படி குற்றமாயிற்று

எனக்கு
கோடி தெரியாது
பாடி அழைக்க
வாடி என்றேன்
வெடிக்கிறாய்.

என் குறும்புகளையும் கூட
தூக்கி வைத்து
எனக்கு செல்லம் கொடுத்தவள்
நீதானே...
இப்போது
என் சினுங்கல்களை
எங்கு போய் கொட்டுவேன்
நான்.............

Friday, September 5, 2008

ஒரு சொல் வெற்றிடம்........

ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.

அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.

ஏதோ ஒரு பொழுதிலேனும்
அதற்கான
சரியான பதிலை - அவள்
மனக்காகிதத்தில் எழுதியிருக்கலாம்.
அதை காலத்தெருவில்
ஏதோ ஒரு தொலைவில்
தொலைத்துவிட்டிருக்கலாம்.

நினைவெங்கும் பசுமை
படர்ந்து கிடக்கிறது.
அவளுக்கே என்று
தந்துவிட்ட
என் இருதயத்தை
எழுதி கிழித்திருக்கலாம்.
ஏனோ
(அவளே எழுதாமல்)
இடம் விட்டிருக்கிறாள்.
யாரோ ஒருத்தி எழுதுவதற்காக
அந்த ஒரு சொல்
வெற்றிடத்தை..............