Saturday, August 30, 2008

கண்ணாடியில் அறைந்துகிடக்கும் பிரியம்

இன்னும் என்ன சொல்ல
கேள்விகளாலேயே
ஆகிவிட்டது உனது உலகம்
எதற்கும்
பதில்களை நீயாகவே
ஆக்கிக்கொள்வாய்
என்று நினைத்தே நான்
மௌனிப்பேன்

அந்தக் கேள்வியாலான
உனது வருத்தத்தை
துடைக்கும் எனது
சொற்களின் சுகம்
உன்னை இன்னும் வேதனை செய்து
அது என்னையும்
காயப்படுத்தும் என்பது
எனக்கென்ன தெரியும்

இருந்தும் நீ
இதுவரை சொன்னதில்லையே
நீ சிரிக்க,
நான் என் முகத்தில் பூசிய
சாயம் சரியில்லையென்று

புன்னகையைத் தவிர வேறு
பதிலே தெரியாதவள்
இப்போதெல்லாம்
குற்றச்சாட்டுக்களை மட்டுமே
முன்வைக்கிறாய்

ஏதோ
இழந்துவிடப் போகிறேன் என்று
எச்சரிக்கிறாய்
பெறுதலின் வலி
அதை இழக்கும் போதுதானே
புரிகிறது

பெற்றதத்தனையும்
இங்கே இழந்துவிட்டுத்தானே
போகிறோம்
இறுதியாக மூச்சை விட்டெறிந்து
உயிரை உதிர்க்கிற போதும்
உன் நினைவுகளை
இழக்கக்கூடாது
என்பதுதானே என் வேண்டுதல்கள்

சொல்லால் துளைத்து
எனை கொல்லாமல் கொல்ல
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்

மொழிகளை வேண்டுமானால்
புரிகிறபடி
மொழிபெயர்த்துக் கொள்ளலாம்
மனசையுமா???

என் விழிகண்டு
உயிரில் வேர்கொண்ட
பெண்மையே
என் அத்தனையுமே
புரியவில்லையா உனக்கு
அதைச்சொல்ல ஏன் இதுவரை
காத்திருந்துவிட்டாய்

சரிவரப் பதில்சொல்லாமல்
சிரித்துப் பேசியது
உன்னை
எவ்வளவு வேதனை
செய்திருக்கும்
உன் கோபம் நியாயம் தான்
அதற்காக
இதயத்தை தூக்கி
கண்ணாடியிலா அறைவாய்

இறுதியாக
கடவுளே
தீர்ப்பிடாமல் கைகழுவி விட
நான் உன் வார்த்தைகளால்
சிலுவையில் அறையப்படலாம்

என் கல்லறையில் வந்து
ஏமாற்றமடைந்து போகாதே
என் ஆவி
உன் நினைவுகளையும்
கூடவே எடுத்துச் சென்றுவிட்டிருக்கும்

இப்போதும் கூட எதுவும்
பேசத்தெரியாது - உன்னை
கெஞ்சிக் கொண்டிருக்கிறது
வார்த்தைகளின் வறட்சியில்
காய்ந்து கிடக்கும்
என் இருதயம்

மனசு என்பது
சொற்களால் ஆனதல்ல
மௌனங்கள் தான்
அதன் மொழி

இன்னொரு தடவை
மொழிபெயர்க்கிறேன்
இதையும் படித்துப்பார்

உன் நினைவுகளைப் புரட்டி
உயிரை உரித்து
கண்ணீரில் ஒரே வார்த்தையாக...

No comments: